Monday, August 24, 2009

நோன்பின் முக்கியத்துவம

நோன்பின் முக்கியத்துவம.
நோன்பானது நமக்கு மட்டும் கடமையான ஒரு அமலல்ல. நமக்கு முன் தோன்றி மறைந்த அனைத்துச் சமுதாயத்திற்கும் இது விதியாக்கப்பட்டுள்ளது. நோன்பு என்பது ஒரு மகத்தான வழிபாடு என்றிருக்காவிடில், இறைவன் எல்லா சமுதாயத்திற்கும் கடமையாக்கி இருக்க மாட்டான்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி, முஸ்லிம் - அபூ ஹுரைரா (ரலி)).

ரமளான் மாதத்தின் சிறப்பு என்னவெனில் இந்த மாதத்தில் நோன்பாளிகளின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. தீமைகள் மறைக்கப்படுகின்றன. அதாவது, அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும், தன் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைத் திருப்திப்பட்டவராகவும் - அதற் கான நன்மையை - நற் கூலியை எதிர்பார்த்தவராகவும் யார் நோன்பு நோற்கிறாரோ, மேலும் அது கடமையாக்கப்பட்டதை வெறுக்காமலும் அதன் நற்கூலியில் சந்தேகம் கொள்ளாமலும் யார் நோன்பு நோற்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஐங்காலத் தொழுகைகளும், ஜும்ஆத் தொழுகைகளும் ரமளான் மாத நோன்புகளும் - அவ்வப்போதைய காலத்தின் பாவங்களைப் போக்கி விடுகின்றன. பெரிய பாவங்கள் தவிர்க்கப்படும் பட்சத்தில் ..! (முஸ்லிம்)

நோன்பில் அதன் நன்மைகளை இவ்வளவு தான் என ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த முடியாது. மாறாக நோன்பு நோற்றவருக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படுகின்றது! மேலும், இறைவன் கூறுகின்றான்: மனிதனின் எல்லா அமல்களும் அவனுக்குரியனவாகவே உள்ளன. ஆனால் நோன்பைத் தவிர! நிச்சயமாக! அது எனக்குரியது. உங்களில் யாரும் நோன்பு வேளையில் பாலியல் தொடர்பான பேச்சுக்கள் பேச வேண்டாம். கூசசலிட்டுப் பேச வேண்டாம். யாராவது அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால், நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் என்று கூறி விடட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயில் இருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட அதிக வாசனை கொண்டதாகும்.

நோன்பாளிகளுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று: நோன்பு திறக்கும் பொழுது அடையும் மகிழ்ச்சி, இரண்டாவது: தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி!.

முஸ்லிமில் உள்ள மற்றோர் அறிவிப்பில் - மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குவரை கூலி வழங்கப்படுகிறது. இறைவன் கூறுகின்றான் : நோன்பைத் தவிர! ஏனெனில் அது எனக்குரியது. நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்! காரணம் ஆசையையும் உணவையும் அவன் எனக்காக விட்டு விடுகின்றான். இந்த மகத்தான நபிமொழி நோன்பின் சிறப்புக்களைப் பல்வேறு வகையில் எடுத்துரைக்கிறது.

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்